திருக்குறளை இந்து சனாதன அடிப்படையில்தான் கட்டமைத்திருக்கிறார் திருவள்ளுவர் : ஹெச்.ராஜா..!

அரசியல்

திருக்குறளை இந்து சனாதன அடிப்படையில்தான் கட்டமைத்திருக்கிறார் திருவள்ளுவர் : ஹெச்.ராஜா..!

திருக்குறளை இந்து சனாதன அடிப்படையில்தான் கட்டமைத்திருக்கிறார் திருவள்ளுவர் : ஹெச்.ராஜா..!

தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பில் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பாணிகிரஹா மண்டபத்தில் வள்ளுவோம் சொல்லுவோம் என்ற தலைப்பில் கருத்து அரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்புரை ஆற்ற பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய ஹெச்.ராஜா: திராவிடப் பொய்யர்கள் புரட்டள்காரர்களால்தான். நாம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் இழந்துகொண்டிருக்கிறோம். முதலில் நாம் ஸ்டாலினுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். பஞ்சமி நில விவகாரத்தை மறைப்பதற்காக தி.மு.க செய்யும் வேலைதான் இது. கடந்த ஐந்தாறு மாதத்திற்கு முன்பு திருவள்ளுவர் காவி உடை அணிந்த படத்தை பா.ஜ.க., ஐ.டி விங் டீம் பதிவு செய்கிறது. அப்போதெல்லாம் இந்தப் பிரச்னை கொண்டுவராமல் இப்போது வருகிறது என்றால் என்ன காரணம். இதற்கு யார் காரணம் என்று முதலில் யோசிக்கவேண்டும். இங்கு நடக்கும் முக்கியப் பிரச்னைகளுக்குக் காரணமே தி.மு.க தான். கலகம் பிறந்தால்தான் வழிபிறக்கும் என்று சொல்வார்கள். முதலில் கலகம் பிறக்கட்டும், தானாக‌ வழியும் பிறக்கும். இந்தக் கோட்பாடு படி பயணிப்பவன் நான்.

அத்தோடு மனிதர்கள் எல்லோருமே ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள்தான். மதத்தைச் சாராதது ஒன்று மட்டுமே. அது மிருகம்தான். சுப.வீரபாண்டியன், கி.வீரமணி, திருமுருகன் காந்தி போன்றோர்கள் பொய்யான கருத்துகளைச் சொல்லி இளைஞர்களின் மூளையைக் குப்பைத்தொட்டியாக மாற்றிவிட்டார்கள். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலமாகச் சுத்தம் செய்வதுபோல் அனைவருடைய மூளைகளைச் சுத்தம் செய்யவேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். சாதி அடையாளம் தப்பில்லை. மொழி, மற்ற இனமொழிகள் அடையாளம் தப்பில்லை என்றால் இந்துமத அடையாளங்கள் மட்டும் ஏன் தப்பு என்கிறீர்கள். இதை நாம் கேள்வி கேட்க வேண்டாமா? இந்தக் கேள்விகளை ஒவ்வொருவரும் கேட்க வேண்டும். திராவிட பாரம்பர்யத்தைக் கொண்ட சில அறிவுஜீவிகள் இந்து மற்றும் ஜாதிய அடையாளங்களைப் பிரித்து வைத்துக்கொண்டு அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள். இதை நாம் ஏற்கக்கூடாது என்றார்.

 

திருவள்ளுவர் திருக்குறளை இந்து சனாதன அடிப்படையில்தான் கட்டமைத்திருக்கிறார். இதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு ஓராயிரம் ரெக்கார்டுகளை நம்மால் காட்டமுடியும். திருக்குறளில் உள்ள 1330 குறள்களிலும் நம்முடைய சனாதன கொள்கைகளைத்தான் சொல்லியிருக்கிறது. திருவள்ளுவர் இந்துதான் என்பதற்கு பூர்ண லிங்கம் பிள்ளை என்பவர் செய்த ஆய்வு முன்னுதாரணமாக இருக்கிறது. பிராமணியத்தைப் பெரிதும் விமர்சித்து வந்தவரான பூர்ண லிங்கம் பிள்ளையே திருவள்ளுவரின் குறள்களை ஆராய்ந்து அவர் இந்துதான், சமணர் அல்ல என்று கூறியிருப்பதாக விக்கிப்பீடியாவில் தெள்ளத் தெளிவாக இருக்கிறது. அத்தோடு ஒளவையார் படத்தில் திருவள்ளுவர் எப்படி வருகிறார். பூணூல் போட்டுக்கொண்டு, காவி வேடத்தில்தான் வருகிறார். இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும். இவர்களுக்கு இன்னும் தெளிவு வேண்டுமானால் என்னிடம் கேளுங்கள் நான் சொல்கிறேன்.

மேலும் வைரமுத்து ஆண்டாளைப் பற்றித் தரக்குறைவாக விமர்சனம் செய்த போது நாம் கடுமையாகப் போராட்டம் செய்ததன் விளைவாக அவர் பத்திரிகையில் எழுதுவதையே நிறுத்திவிட்டார். இதுபோன்று மதத்திற்கு எதிரான விஷயங்கள் நடக்கும் போது அனைவரும் ஒன்றுகூட வேண்டும். அத்தோடு திராவிடக் கட்சி இங்கு பிழைப்பு நடத்துவதற்காக நம்மைப் பிளவுபடுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது. அவர்களுக்கு நாம் யார்; நமது கோட்பாடு என்ன; அவர்களால் நாம் இழந்தவை என்ன என எல்லாவற்றையும் ஒவ்வொரு கூட்டங்களிலும் எடுத்துரைக்க வேண்டும் என்றார். முன்னதாக  தேசிய ஊடகவியலாளர் சங்க பொதுச்செயலாளர் ஜெயகிருஷ்ணன் தேசிய ஊடகவியலாளர் சங்க தலைவர் விஎஸ்.இராமன், பேராசிரியர் ஜெயராமன், பொருளாளர் சந்தோஷ் , அலுவலக செயலாளர் கிருஷ்ணவேணி, இணைச்செயலாளர் பன்னீர்செல்வம், சென்னை மாநகர தலைவர் உதயகுமார் தென்சென்னை மாவட்ட தலைவர் செந்தில் ஆகியோர் தொகுத்து வழங்கினார். இதில் சமூக ஆர்வலர் கோமதி, சுதேசி பத்திரிகை ஆசிரியர் பத்மினி, பிரேம்சாகர், இந்து ஆலய மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உமாஆனந்த், ஜெயராமன், பாணிக்கிரகா ஸ்ரீதர், மற்றும் ஊடகவியலாளர்கள் சங்கம் நிர்வாகிகள், இந்து அமைப்பு நிர்வாகிகள், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், என 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட உள்ள News Portal (www.njwanews.com) என்னும் இணையதளத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் துவக்கி வைத்தார்.!

Leave your comments here...