அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் நடந்தது உறுதி – வருவாய் கோட்டாட்சியர் அறிக்கை

சமூக நலன்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் நடந்தது உறுதி – வருவாய் கோட்டாட்சியர் அறிக்கை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் நடந்தது உறுதி – வருவாய் கோட்டாட்சியர் அறிக்கை

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் நடந்தது உறுதி என்றும், காரை வழங்குவது குறித்து விழா கமிட்டி பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு வருவாய் கோட்டாட்சியர் அறிக்கை சமர்பித்துள்ளார்.

தைத்திருநாளை முன்னிட்டு கடந்த ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. எட்டு சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 12 காளைகளை பிடித்த மதுரையை சேர்ந்த மாடுபிடி வீரர் கண்ணன் சிறந்த மாடுபிடி வீரராக அறிவிக்கப்பட்டார். ஆனால், கண்ணன், ஹரி கிருஷ்ணன் என்பவரின் பனியனை மாற்றி அணிந்து ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்ததையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்த விசாரணை முடிந்து வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் மாவட்ட ஆட்சியரிடம் இன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதில், “காளையை அவிழ்க்க வந்த அச்சம்பத்து கண்ணன் வாடிவாசல் வழியாக களத்திலிறங்கி ஹரி கிருஷ்ணனின் 33ஆம் எண்ணுள்ள பனியனை அணிந்து ஆள்மாறாட்டம் செய்து 12 காளைகளை பிடித்துள்ளார்.

மாடுபிடி வீரராக முறையாக பதிவு செய்யாமலும், கரோனா பரிசோதனை மேற்கொள்ளாமலும் கண்ணன் களத்தில் இறங்கியுள்ளார். ஆகையால் முதல் பரிசுக்குரிய காரை வழங்குவது குறித்து விழா கமிட்டி பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். விசாரணையின் முடிவில் மாடுபிடி வீரர்களான கண்ணன், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் விழா கமிட்டி, மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave your comments here...