திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக வானத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வட்டமடித்து வந்தது. இந்த நிலையில் ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சின் சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்(AXB613) மாலை 5:40 மணிக்கு கிளம்பியது. விமானம் மேலே சென்ற உடன் சக்கரங்கள் உள்ளே செல்ல வேண்டும். ஆனால், ஹைட்ராலிக் பெயலியர் காரணமாக, சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. உடனடியாக சுதாரித்த விமானி டேனியல் பெலிசோ, சார்ஜா செல்லாமல் திருச்சியிலேயே விமானத்தை, தரையிறக்க முயற்சி மேற்கொண்டார்.
எமர்ஜென்ஸி லேண்டிங் முறையில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எரிபொருள் தீர்ந்த பிறகுதான், தரையிறக்க முடியும் என்ற சூழல் உருவானது. எரிபொருள் அதிகம் இருந்தால் எமர்ஜென்ஸி முறையில் தரையிறங்கினால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க விமானி முயற்சி மேற்கொண்டார். இது வழக்கமான முறைதான்.
இதனால், எரிபொருள் தீர்வதற்காக, 5:40 மணி முதல் நடுவானிலேயே 4,255 அடி உயரத்தில், புதுக்கோட்டை- திருச்சி மாவட்ட எல்லைகளில் விமானம் வட்டமடித்தது. அன்னவாசல் பகுதியில் மட்டும் 16 முறைக்கும் மேலாக சுற்றிய விமானம், பாக்குடி, மலம்பட்டி, ஆவூர், முக்கண்ணாமலைபட்டி உள்ளிட்ட பகுதிகளையும் வட்டமடித்தது.பயணிகள் பாதுகாப்பு கருதி, மருத்துவ குழுவினருடன் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டன. விமான நிலையத்தில் இருக்கும் 4 ஆம்புலன்சுகளும் அங்கு வந்தன. போலீசார் குவிக்கப்பட்டனர். விமான ஓடுபாதையில், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
விமான நிலைய அதிகாரிகள் இரவு 8.15 மணிக்கு தரையிறக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்படி சரியாக இரவு 8.15 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது..
இந்த தகவல் பரவியதும், விமானத்தின் தற்போதைய நிலை பற்றி அறிய உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பேர், பிளைட்டிராக்கிங் இணையதளங்களில் பரிதவிப்புடன் பார்வையிட்டன
Leave your comments here...