இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு இன்று சந்தித்தனர். சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடையே உரையாற்றிய பெஞ்சமின் நெதன்யாகு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அப்போது மேக்ரான் கூறுகையில், இஸ்ரேலுக்கும், பிரான்சுக்கும் பயங்கரவாதம் பொது எதிரி. இதில் இஸ்ரேல் தனியாக இல்லை. ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்தவர்கள் ஹமாசுக்கு எதிராகவும் ஒன்றிணைய வேண்டும். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் உலக அளவில் ஒன்றிணைந்தது போல ஹமாசுக்கு எதிரான போரிலும் பிரான்ஸ் ஒன்றிணையும். பாலஸ்தீன பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் இஸ்ரேல் தீர்வு கண்டால் மட்டுமே மத்திய கிழக்கு பகுதியில் அமைதி, நிலைத்தன்மை ஏற்படும்’ என்றார்.
அப்போது பேசிய பெஞ்சமின் நெதன்யாகு:-, “அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. உலக வரலாற்றிலேயே 9/11 தாக்குதலுக்கு பிறகு நடைபெற்ற மிகக் கொடூர தாக்குதலாக இது அமைந்தது. இந்த தாக்குதல் கிட்டத்தட்ட இருபது 9/11 தாக்குதல்களுக்கு சமமான ஒன்று ஆகும். ஹாலோகாஸ்ட்-ஐ தொடர்ந்து யூதர்களுக்கு எதிரான நடத்தப்பட்ட மிகக் கொடூர தாக்குதல் இது.
ஹமாஸ் குழந்தைகளை கொன்று, அவர்களின் தலையை துண்டாக்கினர், பாலியல் ரீதியிலான குற்றங்களில் ஈடுபட்டனர். மேலும் பிணைகளை கடத்திச் சென்றுள்ளனர். காசாவில் உள்ள ஹமாஸ்-ஐ அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வோம். ஹமாஸ்-ஐ முழுமையாக வேரறுப்போம்.
“”ஹமாஸ்-இன் பயங்கரவாதத்தை அழித்து, அதன் அரசியல் கட்டமைப்பை உடைத்தெறிவோம். எங்களின் பிணைகளை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்,” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமன் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.
18வது நாளாக தொடரும் போர்:இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 18வது நாளாக நீடித்து வருகிறது.
Leave your comments here...