வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை வரவேற்ற ஜோ பைடன்..!இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

Scroll Down To Discover

குவாட்’ மாநாடு மற்றும் ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்திப்பதற்காக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு நேற்று சென்றார்.

பிரதமராக பதவியேற்ற பின் அமெரிக்காவுக்கு ஏழாவது முறையாக மோடி சென்றுள்ளார். அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்ற பின், அவரை தற்போது தான் பிரதமர் மோடி நேரடியாக சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது, பரஸ்பரம் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், கொரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

முன்னதாக வெள்ளை மாளிகையில் தனக்கு வரவேற்பு அளித்த பைடனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் அமெரிக்காவுடன் புதிய அத்தியாயம் துவங்கி உள்ளது.ஜனாதிபதி ஜோ பிடன் காந்தி ஜெயந்தியைக் குறிப்பிட்டார். காந்தி அறக்கட்டளை பற்றி பேசினார் இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


இந்த சந்திப்பின் போது, ஜோ பைடனிடம் மோடி கூறியதாவது: அமெரிக்காவின் முன்னேற்றத்தில் இந்திய வம்சாவளியினர் பெரும் பங்காற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து வரும் 1௦ ஆண்டுகளில் உலகம் எப்படியிருக்கும் என்பதை உங்கள் தலைமை வடிவமைக்கும் என நம்புகிறேன். இந்திய – அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்தவதற்கான விதைகள் ஊன்றப்பட்டுள்ளன.


இப்போது உலகை வழிநடத்தும் சக்திகளில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றி வருகிறது; இதை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய – அமெரிக்க உறவில் வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை மேலும் மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மோடி கூறினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்கா – இந்தியா இடையேயான உறவு மேலும் வலுவடையும் என்பது உறுதி. இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயம் துவக்கப்பட்டுள்ளது. கொரோனா, தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றின் சவால்களையும், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் வளர்ச்சிப் பணியில் ௪௦ லட்சம் இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.