வெளிநாட்டு நிதியுதவி… உபி-யில் மிகப் பெரிய அளவில் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட முஸ்லிம் மதகுரு மவுலானா கலீம் சித்திக் கைது..!

Scroll Down To Discover

உத்தர பிரதேசத்தில், மிகப் பெரிய அளவில் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட முஸ்லிம் மதகுரு மவுலானா கலீம் சித்திக் என்பவரை, பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஜூனில், டில்லி ஜாமியா நகரை சேர்ந்த முப்தி குவாஸி ஜஹாங்கிர் ஆலம் குவாஸ்மி மற்றும் முகமது உமர் கவுதம் ஆகியோரை, பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடம் இருந்து நிதி உதவி பெற்று, காது கேட்க முடியாத, வாய் பேச முடியாத மாணவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றும் மிகப் பெரிய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இவர்களுக்கு, ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த அல் – பல்லா அறக்கட்டளையில் இருந்து 57 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டதும் தெரியவந்தது. இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

இந்த வரிசையில், உபியின் மீரட்டை சேர்ந்த மதகுரு மவுலானா கலீம் சித்திக் என்பவரை பயங்கரவாத தடுப்பு படை கைது செய்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், பயங்கரவாத தடுப்பு படை தலைமையகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையில் சித்திக் பல்வேறு கல்வி, சமூக, ஆன்மிக அமைப்புகளின் பேரில், மிகப் பெரிய மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த சட்ட விரோத மதமாற்றத்துக்கு மிகப் பெரிய அளவில் வெளிநாட்டு நிதியும் வழங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துஉள்ளது.