விபத்தில் பலியான 6 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.!

Scroll Down To Discover

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்னும் இடத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று (ஜூலை 8) காலை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து ஒன்று கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியதில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்.


உயிரிழந்தவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இதே விபத்தில் காயமடைந்த ஒன்பது நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் ஐந்து லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரமும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.