ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை செலுத்தினார் நடிகர் விஜய் -ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்!

Scroll Down To Discover

கடந்த, 2012ல், பிரிட்டனில் இருந்து, ‘ரோல்ஸ் ராய்ஸ்’ காரை, நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இந்த காருக்கு, நுழைவு வரி விதிக்க தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் விஜய் மனு தாக்கல் செய்தார்.மனுவை தள்ளுபடி செய்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஒரு லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க, விஜய்க்கு உத்தரவிட்டார்.

நடிகர்கள் முறையாக வரி செலுத்தவும், ‘ரியல் ஹீரோ’வாக இருக்க வேண்டும்; ‘ரீல் ஹீரோ’வாக இருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு செய்தார். மனு, நீதிபதி எம்.துரைசாமி தலைமையிலான அமர்வில், விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே செலுத்திய, 20 சதவீதம் தவிர்த்து, மீதி 80 சதவீத வரி தொடர்பாக, கேட்பு ரசீது வழங்கினால், ஒரு வாரத்தில் செலுத்துவதாக, விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அரசு தரப்பு வழக்கறிஞர், ‘மனுதாரர் செலுத்த வேண்டிய மீதி தொகைக்கு, ரசீது வழங்கும்படி அறிவுறுத்துகிறேன்’ என்றார்.

இதையடுத்து, அபராதம் விதித்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, ஒரு வாரத்தில் மீதி தொகைக்கான ரசீதை வணிக வரித்துறை வழங்கவும், அந்த தொகையை ஒரு வாரத்தில், மனுதாரர் செலுத்தவும், டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.வழக்கு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்திகுமார் சுகுமார குருப் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.

இறக்குமதி காருக்கான நுழைவு வரி பாக்கி செலுத்தப்பட்டு விட்டதாக, அரசு தரப்பிலும், விஜய் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.