ரூ.486 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.!

Scroll Down To Discover

சென்னை கோயம்பேட்டில் ரூ.486 கோடி செலவில் 3-ம் நிலை கழிவுநீர் எதிர் சவ்வூடு பரவல் முறை மூலம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வந்தது. 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் முழுமையாக நிறைவடைந்ததையொட்டி இதன் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுத்திகரிப்பு நிலையத்தை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்:- அதிக அளவில் கழிவுநீரை சுத்திகரிக்கும் மாநிலமாக தமிழகம் திகழும் என்றார். சென்னையில் மக்களுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் வெளியேற்றும் வசதி உடனடியாக கிடைக்கும் வகையில் ”அழைத்தால் இணைப்பு” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.  3ம் நிலை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து ஆலைகளுக்கு நீர் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.


இங்கு சுத்திகரிக்கபடும் கழிவு நீரானது, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மறுபயன்பாடு செய்யப்பட இருக்கிறது.

இதையடுத்து, நீர் மறு பயன்பாடுக்கொள்கையை முதலமைச்சர் வெளியிட அதை துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, அன்பழகன், எம்எல்ஏகள் தி.நகர் சத்தியா, விருகை ரவி, தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.த.ந. ஹரிஹரன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய செயல் இயக்குநர் திரு.த.பிரபு சங்கர், மற்றும் மண்டல உதவி ஆணையர் பரந்தாமன், செயற்பொறியாளர்கள் பெரியசாமி, சின்னத்துரை, உதவி செயற்பொறியாளர்கள் கண்ணன், ராஜி, சுரேஷ், வருவாய் உதவி அலுவலர் ரவிச்சந்திரன், உள்ளிட் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.