மூத்த பத்திரிகையாளர் திரு.வி.அன்பழகன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி.!

Scroll Down To Discover

கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும், மக்கள் செய்தி மையத்தின் ஆசிரியரும், பல்வேறு ஊழல்களை வெளிக்கொண்டு வந்த மூத்த பத்திரிகையாளருமான திரு.வி அன்பழகன் இன்று பிற்பகலில் சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.

மூத்த பத்திரிகையாளர் திரு.வி.அன்பழகன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் :- சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.வி.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற அதிர்ச்சி தரும் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நக்கீரன், தமிழ் முரசு உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றிய அன்பழகன் அவர்கள் மாற்றுக்குரல்களின் முக்கிய முகமாகத் திகழ்ந்தார் என்பதை அனைவரும் அறிவர். மக்கள் செய்தி மையம் என்ற ஊடகத்தைத் தொடங்கிய அவர் அதிகார மையங்களின் தவறுகளை வெளிக்கொண்டுவந்து மக்கள் முன் நிறுத்துவதில் முனைப்புடன் செயலாற்றியவர் அடக்குமுறைகளை அஞ்சாமல் எதிர்கொண்டவர்.

உண்மையின் பக்கம் நின்று செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க துணிவுடன் செயல்பட்ட அவரது பணி ஊடக உலகில் நிலைத்து நின்று அவரது புகழைப் பேசும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஊடகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.