முப்படை தலைமை தளபதியாக அனில் சவுஹான் அறிவிப்பு – மத்திய அரசு

Scroll Down To Discover

முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹான், 61, நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

ராணுவம், கப்பல், விமானம் உள்ளிட்ட முப்படைகளுக்கும் தலைமை வகிக்கும் உயரிய பொறுப்பான முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவி 2020ல் உருவாக்கப்பட்டது. முதல் தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் பொறுப்பேற்றார்.

கடந்த 1961, மே 18ல் பிறந்த அனில் சவுஹான், நம் ராணுவத்தின் குர்கா ரைபில்ஸ் படைப்பிரிவில் 1981ல் பணியில் சேர்ந்தார். ஜம்மு – காஷ்மீரின் மிக கடுமையான பாராமுல்லா பகுதியில் வடக்கு படைப்பிரிவில் காலாட்படையின் மேஜர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.

வடகிழக்கு படைப்பிரிவில் லெப்டினன்ட் ஜெனரலாகவும், கிழக்கு படைப்பிரிவில் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் – இன் – சீப் ஆகவும் பணியாற்றி உள்ளார். இவர், 2021, மே மாதம் பணி ஓய்வு பெற்றார். சிறப்பான ராணுவ பணிக்காக பரம் வசிஷ்ட் சேவா, உத்தம் யுத் சேவா உட்பட பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.