மீன் பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பு – வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.!

Scroll Down To Discover

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேயுள்ளது முகவூர். இங்குள்ள தொண்டமான் குளத்தில் அந்தப்பகுதி மக்கள் மீன் பிடிப்பது வழக்கம். நேற்று இரவு மீன் பிடிப்பதற்காக குளத்தில் வலை விரித்தனர்.

இன்று காலை மீன் வலையை இழுத்த மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மீன் வலையில் மீனுக்கு பதிலாக 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு இருந்ததைப் பார்த்து அலறியடித்து ஓடினர். அங்கிருந்த ஒருவர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் மலைப் பாம்பை மீட்டனர்.

பிடிபட்ட மலைப்பாம்பை மேற்கு தொடர்ச்சி மலையின், அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர். தொண்டைமான் குளம் பகுதியில் வீடுகள் அதிகமாக உள்ளன. கடந்த சில மாதங்களில் 7வது முறையாக மலைப்பாம்பு சிக்கியிருப்பது அந்தப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் மலைப்பாம்புகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.