மன்னார்குடியில் என்ஐஏ சோதனை – பாபா பக்ருதீன் என்பவர் கைது..!

Scroll Down To Discover

சென்னையில் உள்ள புரசைவாக்கம் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட 5 இடங்களில் கடந்த ஜனவரி 28ம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) சோதனையில் ஈடுபட்டனர்.

அதே போன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் என்ற பகுதியில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  சென்னை, திருவாரூர் உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டது தொடர்பாக திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்த பாபா பக்ருதீன்(45) வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இவர் மற்றும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சத்திரம் கருப்பூரை சேர்ந்த ஜியாவுதீன் பாகவி(40) மற்றும் முகமது இக்பால் (எ) செந்தில்குமார் ஆகியோர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மன்னார்குடி ஆசாத் நகரில் உள்ள பாபா பக்ருதீன் வீட்டுக்கு இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் 4 பேர் ஒரு காரில் வந்தனர். வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கொண்டு வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். 10 மணியளவில் சோதனையை முடித்துக்கொண்டு அடுத்த கட்ட விசாரணைக்காக பாபா பக்ருதீனை சென்னைக்கு அழைத்து சென்றனர்.