மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவை எதிர்த்து வழக்கு : ஆலோசனை நடத்த கேரள அமைச்சரவை முடிவு

Scroll Down To Discover

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதி, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும், பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டரீதியாகப் போராடுவதற்கான வாய்ப்புகளை ஆராய சட்ட அமைச்சகத்தைக் கேட்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ”கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என, ஆராய்வது அவசியம். அதனால், அதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்ய சட்ட அமைச்சகத்தை கேட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளோம்,” எனத் தெரிவித்தார்.