புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோ வெளியானது.!

Scroll Down To Discover

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரில், மாநில துணை துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜஸ் மிஸ்ரா இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், மேற்படி நிகழ்ச்சிக்கு வர இருந்த துணை துணை முதல்வர்க்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கறுப்புக்கொடிகளுடன் திகுனியாவில் சாலையின் இருபுறமும் திரண்டு கோஷமிட்டவாறே இருந்தனர். அப்போது பா.ஜனதா தொண்டர்களின் கார் அணிவகுப்பு ஒன்று அந்த வழியாக வந்தது. இதில் ஒரு கார் விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 விவசாயிகள் பரிதாபாக உயிரிழந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அங்கு பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். பா.ஜனதாவினர் வந்த 2 கார்களை தீ வைத்து எரித்த அவர்கள், அதில் வந்தவர்களையும் பலமாக தாக்கினர்.பயங்கரமாக அரங்கேறிய இந்த வன்முறையில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தனது பயணத்தை ரத்து செய்தார். விவசாயிகள் மீது வேண்டுமென்றே காரை மோதியதாகவும், அந்த காரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

அத்துடன் அவர் விவசாயிகள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் தனது மகன் அந்த காரில் இல்லை என மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா கூறியுள்ளார். விவசாயிகளின் போராட்டத்தில் மூண்ட வன்முறையில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும்,பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.

முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக லகிம்பூர் கேரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பல இடங்களில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதியதின் வீடியோ வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், நெஞ்சை பதை பதைக்கும் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.


அந்த வீடியோவில் சாலையில் நிற்கும் விவசாயிகள் பின்புறம் வழியாக வேகமாக வரும் கார் அவர்கள் மீது ஏற்றிவிட்டு நிறுத்தாமல் செல்கிறது. தொடர்ச்சியாக இரண்டு கார்கள் அதேபோல செல்கின்றன. இந்த வீடியோவை டுவிட்டரில் பலரும் பகிர்ந்துவருகின்றனர். அந்த வீடியோ பார்ப்பவர்களைப் பதறச் செய்யும் வகையில் உள்ளது.