பிரான்ஸிடம் இருந்து மேலும் 26 ரஃபேல் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா தொடர்ந்து தனது ராணுவ பலத்தை அதிகரிக்க ஆயுதங்கள்ல விமானங்கள்,போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இதற்காக இந்தியா மற்ற நாடுகளுடன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்தியாவிற்கு தேவையான ராணுவ தளவாட பொருட்களை வாங்கி வருகிறது.
இந்தியாவின் அடுத்தகட்ட முக்கிய வளர்ச்சியாக பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் மூன்று ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்மொழிவுகள் பாதுகாப்புப் படைகளால் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன் வைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் மேற்கொள்ளவுள்ள பிரான்ஸ் பயணத்தின் போது இந்த விவரங்கள் அறிவிக்கப்படும் என்று அரசு தரப்பிலான வட்டாரங்கள் தெரிவித்ததாக ANI செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்திய கடற்படைக்கு 22 ஒற்றை இருக்கை ரஃபேல் மரைன் விமானங்களும், நான்கு பயிற்சி விமானங்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றாக்குறை இருப்பதைக் கருத்தில் கொண்டு அவற்றை அவசரமாக வாங்குவதற்கு கடற்படை அழுத்தம் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் அரசுடன் மேற்கொள்ளவிருக்கும் இந்த ஒப்பந்தங்கள் ரூ.90,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னரே இறுதி அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave your comments here...