பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தில் இறந்தவர்கள் பெயரில் முறைகேடு – அறிக்கையில் அம்பலம்

Scroll Down To Discover

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை மக்களவையில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் உள்ள தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன. உயிரிழந்த 3446 நோயாளிகளுக்கு பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்ததாக ரூ.6.97 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியை தவறாகப் பயன்படுத்துதல், போலி கணக்குகள், முறையான ஆதாரங்கள் இல்லாமல் நிதியை விடுவித்தல் என பல ஓட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த மோசடியில் கேரளா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில், ஏற்கனவே இறந்துபோன 966 நோயாளிகளின் பெயர்களில் காப்பீட்டு தொகையை பெற்றுள்ளனர். அவர்களுக்கு ரூ.2.61 கோடி மதிப்பிலான தொகை வழங்கப்பட்டிருக்கிறது. 403 பேரின் பெயரில் காப்பீட்டு தொகையை பெற்று மத்திய பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

50 கோடிக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு இலவச மருத்துவச் சேவையை வழங்கும் நோக்கத்தில் 2018ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்மூலம், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.