பிரசவத்திற்கு இலவசம் என்றிருந்த ஆட்டோக்கள், மத்தியில் ஆஸ்பத்திரிக்கு இலவசம் என்று மக்கள் சேவையாற்றும் ஆட்டோ டிரைவர்.!

Scroll Down To Discover

மதுரையில் மருத்துவ அவசரத்திற்கு செல்லும் நோயாளிகள் மற்றும் எளியோர்களுக்கு பணம் வாங்காமல் இலவசமாக ஆட்டோ ஓட்டி சேவை செய்து கொண்டிருக்கிறார் மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் லெட்சுமணன்.

ஊரடங்கு காலம் என்பதால், அடிப்படையிலேயே பொருளாதார நெருக்கடிகளை ஆட்டோ ஓட்டுனர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
அதிலும், மூன்று குழந்தைகளையும், கூலி வேலைக்கு செல்லும் மனைவியையும் கொண்ட , லெட்சுமணன் பெரும் நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறார்.

அந்த நெருக்கடிகளை மீறியும் தன்னுடைய ஆட்டோவில் “ஆஸ்பத்திரி அவசரத்திற்கு இலவசம்” என்ற வாசகங்களை எழுதிக்கொண்டு மருத்துவமனை வாயில்களில் உதவிக்கரம் நீட்டி காத்திருக்கிறார். யார் வந்து ஏறினாலும் பத்திரமாக வீட்டிற்கும், வீட்டிலிருந்து மருத்துவமனைக்கும் கொண்டு சேர்க்கிறார்.

இதுகுறித்து, ஆட்டோ ஓட்டுநர் லட்சுமணனுடன் பேசும்போது: கடந்த, இரண்டரை ஆண்டுகளாக ஆட்டோ தொழில் செய்து வருவதாகவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆட்டோவை வீட்டில் சும்மா நிறுத்தி வைத்திருக்காமல் நம்மால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்யலாம் என்ற நோக்கத்தில் கடந்த 25 நாட்களாக இலவசமாக ஓட்டிக் கொண்டிருப்பதாகவும்,அவசர காலத்தில் போன் செய்து அழைத்தாலும் வீட்டிற்கே போய் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்பதாகவும்,. ஆனால், வறுமையில் இருப்பவர்களிடம் ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டேன் எனவும் கூறுகிறார்.

கொரோனா காலம் முழுவதும் இந்த உதவியை தொடர்ந்து செய்ய வேண்டும் என நினைக்கிறேன் எனவும், ஆனால், காவல்துறை கெடுபிடிகளை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் எனக்கு அனுமதி பாஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன், ஆட்டோ டிரைவர் லட்சுமணனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

செய்தி: Ravi Chandran