பழைய வாகனத்தை அழித்து புதிய வாகனம் வாங்கினால் சலுகை – மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!

Scroll Down To Discover

பழைய வாகனத்தை அழித்துவிட்டு புதிய வாகனம் வாங்குபவர்களுக்கு சாலை வரியில் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சுற்றுசூழலில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அழிக்‍க, வாகன அழிப்புக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் தனிநபர் வாகனங்களும், 15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களும் தகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அவற்றில் தேர்ச்சியடையாத வாகனங்களை அழித்து, ஸ்கிராப்பிங் மையத்தில் வாகனத்தை அழித்தற்கான சான்றிதழ் பெற வேண்டும். இந்தச் சான்றிதழைக் காட்டி புதிய வாகனம் வாங்கும்போது அதன் விலையில் 5 சதவீதம் அளவில் தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் முன்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மாநில அரசால் சாலை வரியிலும் 25 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சகம் கூறியுள்ளது. இந்தச் சலுகை வர்த்தக பயன்பாட்டு வாகனங்களாக இருந்தால் 8 ஆண்டுகள் வரையும், தனி நபர் பயன்பாட்டு வாகனங்களாக இருந்தால் 15 ஆண்டுகள் வரையும் கிடைக்கும் என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்‍கப்பட்டுள்ளது.

மேலும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை புதுப்பிக்க வழக்கமான கட்டணத்தை விட 8 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இருசக்கர வாகனங்களுக்கான பதிவு கட்டணம் ரூ.300 ஆகும். இதுவே 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமையான இருசக்கர வாகங்களை பதிவு செய்ய வேண்டும் என்றால் ரூ.1000 வரை அவர்கள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

இதேபோல் கார்களை பதிவு செய்ய கட்டணம் ரூ.600 ஆகும். இதுவே 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமையான கார் என்றால் பதிவு கட்டணம் ரூ.5000 செலுத்த வேண்டிவரும். மேலும் 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களுக்கு தரப் பரிசோதனை செய்வது கட்டாயம் ஆகும். இதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.