பயங்கரவாத வழக்குகளில் தொடர்பு : 3 குற்றவாளிகளின் சொத்துகள் முடக்கம் – என்.ஐ.ஏ. நடவடிக்கை

Scroll Down To Discover

பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராக தடை, நிதிகள் முடக்கம் மற்றும் ஆதரவளிப்போருக்கு சிறை, அபராதம் உள்ளிட்ட கடுமையான பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 3 குற்றவாளிகளின் சொத்துகளை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) இன்று முடக்கி உள்ளது.

இதன்படி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் சோபியான், லெத்போரா மற்றும் குப்வாரா பகுதிகளில் பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 3 குற்றவாளிகளின் சொத்துகள் இன்று முடக்கப்பட்டன. நாட்டில் தடை செய்யப்பட்ட ஹிஜ்புல் முஜாகிதீன் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளின் உறுப்பினர்களுடன் தொடர்புடைய, பயங்கரவாத நடவடிக்கைகள் சார்ந்த இரு வெவ்வேறு வழக்குகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவற்றில் முதல் வழக்கில், ஹெர்மன் சோபியான் பகுதியை சேர்ந்த தவுலத் அலி முகல் மற்றும் ஈசாக் பலா ஆகிய இருவரின் அசையா சொத்துகளை உபா சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ. முடக்கி உள்ளது. 2-வது வழக்கில், பயஸ் அகமது மக்ரே என்ற குற்றவாளியின் அசையா சொத்துகளை முடக்கி உள்ளது. இவர் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தின் அடிமட்ட பணியாளராக செயல்பட்டு வந்து உள்ளார். அரியானாவின் ஜஜ்ஜார் நகரில் உள்ள மாவட்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.