நெல்லையில் சாலை விபத்து : மருத்துவ மாணவிகள் உட்பட 3 பேர் பலி!

Scroll Down To Discover

நெல்லை – மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள ரெட்டியார்பட்டி அருகே கார் மற்றும் இரண்டு சக்கர வாகனம் மோதியதில் மருத்துவக் கல்லூரி மாணவிகள் இருவர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் ஒன்றின் டயர் வெடித்ததில் நான்கு வழிச் சாலையின் நடுவே இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு எதிரே வந்த பைக் மீது மோதியதில் பைக்கில் பயணம் செய்த நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் தூக்கி வீசப்பட்டனர்.

இவ்விபத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் காயத்ரி, பிரிட்டோ ஏஞ்சல் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சண்முகசுந்தரம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த மற்றொரு மருத்துவக் கல்லூரி மாணவி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பாக நெல்லை மாநகராட்சி ஆணையர் சுரேஷ் குமார் உட்பட காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.