நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவராக நாளை பதவியேற்கும் திரௌபதி முர்மு..!

Scroll Down To Discover

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆதரவின்படி பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு 6,76,803 மதிப்பிலான வாக்குகள் கிடைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 3,80,177 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார்

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 15ஆவது குடியரசு தலைவர் பதவி ஏற்புக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலில் தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்போடு நாடாளுமன்றம் அழைத்துவரப்படுவார். அதன் பின்னர் பதவி ஏற்பு விழா தொடங்கும்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கிறார்.

பின்னர், புதிய குடியரசுத் தலைவரின் உரை முடிந்த பின்னர் குதிரைப்படை வீரர்கள் அணிவகுப்புடன் குடியரசு தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை மரியாதையை ஏற்றுக்கொள்வார். இந்த நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். மேலும், 64 வயதான முர்மு நாட்டின் இளம் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார். 2000-2004 ஆண்டு காலகட்டத்தில் ஒடிசா மாநில அமைச்சராக இருந்துள்ள திரௌபதி முர்மு, 2015-2021ஆம் ஆண்டு வரை ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார்.இதுவரை குடியரசுத் தலைவராக இருந்தவர்கள் அனைவரும் நாடு விடுதலை பெறுவதற்கு முன்னர் பிறந்தவர்கள் என்ற நிலையில், 1947க்குப் பின் பிறந்து குடியரசுத் தலைவராகும் முதல் நபர் திரௌபதி முர்மு தான்.