நாடு முழுவதும் 850 ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்படுகின்றன : டிஆர்டிஓ தகவல்

Scroll Down To Discover

கொவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டின் தேவைகளை நிறைவு செய்ய பிரதமரின் நல நிதியிலிருந்து நாடு முழுவதும் 850 ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்படுவதாக ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மைய (டிஆர்டிஓ) செயலாளர் தெரிவித்தார்.

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை முன்னிட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நடத்திய கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியில் டிஆர்டிஓ செயலாளர் டாக்டர் சி.சதீஷ் ரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது:

கொவிட்-19 இரண்டாம் அலையில் மக்களுக்கு உதவ அனைத்து விதமான உதவிகளையும் வழங்க டிஆர்டிஓ தயாராக உள்ளது. பல நகரங்களில் நாங்கள் தற்காலிக கொவிட்-19 மருத்துவமனைகளை அமைத்துள்ளோம். இதை நாங்கள் பறக்கும் மருத்துவமனைகள் என அழைக்கிறோம். வைரஸ்கள் மருத்துவமனையை விட்டு பரவாத வகையில் இந்த மருத்துவமனைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது அலை ஏற்பட்டால், அனைத்து மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிக்கும். அதனால் இந்த தற்காலிக மருத்துவமனைகளை பல இடங்களில் அமைப்பது தொடர்பாக அரசு பல தரப்பினருடன் ஆலோசித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

கொவிட் தொற்றை எதிர்கொள்ள மத்திய அரசு மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை மேற்கொண்ட பல நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்தும், தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்தும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் அசுதோஷ் சர்மா பேசினார்.