தூய்மை இந்தியா திட்டத்தால் 99 சதவீத நகரங்களில் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லை.!

Scroll Down To Discover

மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு காந்தி ஜெயந்தியன்று தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத, சுத்தமான இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

கிராமங்களில் கழிவறைகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்திய ஆய்வுகளின்படி, 99 சதவீத இந்திய நகரங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லை என்பதும் ஒருவர் கூட திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பது இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் 6-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு டெல்லியில் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி கூறும்போது, ‘‘99 சதவீத நகர்ப்புற பஞ்சாயத்துகளில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் மட்டும் கரோனா பாதிப்பு காரணமாக இன்னும் ஆய்வு நடத்தப்படவில்லை. அங்கும் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டால் 100 சதவீத நகரங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லை என்ற நிலை ஏற்படும். கரோனா பாதிப்பு முடிந்த பின் அங்கும் ஆய்வு நடத்தி, மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த நாளில் 100 சதவீத நகரங்களில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்’’ என்றார்.