திருமங்கலம் அருகே 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை டன் குட்கா பறிமுதல்.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் திருமங்கலம் எஸ்.ஐ. பாலமுருகன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே வந்த மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.அப்போது மினி லாரியில் பண்டல் பண்டலாக குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் லாரி டிரைவர் மாடசாமி (வயது 32)என்றும் அவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.புகையிலை பொருட்களை அவர் சேலத்தில் இருந்து விருதுநகருக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மினி லாரி மற்றும் 9 லட்சம் ரூபாய் பெருமானமுள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாடசாமியிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.