திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று முதல் 3 நாட்கள் சாமி தரிசனம் செய்ய தடை

Scroll Down To Discover

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் கோவிலில் வழக்கமான பூஜைகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடந்தது.

பின்னர் ஊரடங்கு தளர்வில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு, அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதித்தனர். சாமி தரிசனம் செய்வதற்கு 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதனால் திருச்செந்தூர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் 3 நாட்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவில் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பக்தர்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.