திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்-தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்..!

Scroll Down To Discover

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி திருவிழாவின் சஷ்டி நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான இன்று நடந்தது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணி அளவில் கோவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தில் கஜமுக வடிவில் வந்த சூரபத்மனை முதலில் முருகன் வதம் செய்தார். பின்பு சிங்க முகத்தில் வந்த சூரபத்மனையும், தொடர்ந்து சுய ரூபத்தில் வந்த சூரபத்மனையும் முருகன் வதம் செய்தார். இறுதியில் சூரபத்மனை சேவலும், மயிலும் ஆக முருகன் ஆட்கொண்ட நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமெழுப்பினர்.