தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள் – அண்ணாமலை

Scroll Down To Discover

ஒரு தனிநபரின் தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத் துறையையும் குறைகூறக் கூடாது, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த அவர், ”லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இது முதல் கிடையாது, கடைசியாகவும் இருக்கப் போவதில்லை. ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி என பல மாநிலங்களில் இதுபோல் கைது நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன. ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை பொறிவைத்துப் பிடித்துள்ளனர். இவ்வாறாக பிடிக்கும் அதிகாரம் அத்துறைக்கு உள்ளது. சிக்கிய பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறைக்குச் சொல்லிக் கொள்ளலாம். அதனால் இந்தக் கைதோ, ஊழல் தடுப்புத் துறையின் நடவடிக்கையோ நியாயமானதே. அதை மறுப்பதற்கு இல்லை.

ஆனால் ஒரு தனி மனிதர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத் துறையையுமே குறை சொல்ல முடியாது. தமிழக காவல்துறையில் யாரேனும் ஒருவர் தவறு செய்தால் காவல்துறையே மோசம் என்று சொல்லிவிட முடியாது அல்லவா? அதுபோலத்தான் இதுவும். நேற்று (டிச.1) அமலாக்கத் துறையில் கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை தொழில்முறை பார்வையோடு அணுக வேண்டும். இதற்காக மொத்த அமலாக்கத் துறையுமே இப்படித்தான் என்று சாயம் பூச முடியாது.

ஆனால், தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள். அதனால் ஒரு தனி மனிதத் தவற்றை கட்சியோடும் தலைவர்களுடன் ஒப்பிடுகின்றனர்.தமிழகம் இப்படியான அரசியல்வாதிகளைக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது தமிழகத்தின் சாபக்கேடு அந்த சாபக்கேட்டை 2026ல் பாஜக விலக்கும்” என்றார்.