தமிழகம் முழுதும், இன்று முதல், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்.!

Scroll Down To Discover

தமிழகம் முழுதும், இன்று முதல், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க, இம்மாதம் 10ம் தேதி முதல், இன்று(மே 24) காலை, 4:00 மணி வரை, சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தளர்வுகளை பயன்படுத்தி, சிலர் வெளியில் சுற்றினர். அதை தடுக்க, 15ம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன; அதுவும் பலன் அளிக்கவில்லை. எனவே, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு, இன்று முதல், 31 காலை, 6:00 மணி வரை அமலாகிறது.

இன்று முதல், ஒரு வாரத்திற்கு கடைகள் எதுவும் திறக்கப்படாது; மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும். உணவகங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும், ‘பார்சல்’ சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களை பொறுத்தவரை, தலைமை செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்; மற்ற அலுவலகங்கள் செயல்படாது.தனியார் நிறுவன ஊழியர்கள், வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் எதுவும் இயங்காது. எனவே, பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து, முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது