தமிழகத்தில் அமையவுள்ள ராணுவ தளவாட வழித்தடம் மிகப்பெரும் வாய்ப்பு: குடியரசு துணைத் தலைவர்

Scroll Down To Discover

பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இந்தியாவை தற்சார்பான நாடாக ஆக்குவதற்கும், நவீன ராணுவ தளவாடங்களின் ஏற்றுமதி மையமாக உருவாக்குவதற்கும் நவீன தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு இன்று கூறினார்.

பெங்களூரு ஹெச்ஏஎல் வளாகத்தில் இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட் மற்றும் ஏரோனாடிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சியின் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களிடையே உரையாடிய குடியரசு துணைத் தலைவர், விமானவியல் துறையில் இந்தியா முன்னேறுவதற்கும் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையமாக வரும் காலங்களில் உருவாவதற்கும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்கள் முக்கிய பங்காற்றும் என்றார்.

தனது அனைத்து அண்டை நாடுகளுடனும் இந்திய நட்புறவை விரும்புவதாக கூறிய குடியரசு துணைத் தலைவர், ஆனால் சில நாடுகள் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு நிதியளித்து ஆதரவளித்து வருவதாகவும், ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

“எனவே, நமது நாட்டின் அமைதி மற்றும் வளத்திற்கு நமது எல்லைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்,” என்று அவர் கூறினார். ஆக்கிரமிப்பு எண்ணத்தோடு இந்தியா எப்போதும் இருந்ததில்லை எனக் கூறிய குடியரசு துணைத் தலைவர், அனைவரும் அமைதியாக வாழ்வதும், பயங்கரவாத மற்றும் தீய சக்திகளை ஒடுக்குவதுமே நமது எண்ணம் என்றார். தனது மக்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக வலுவாக உருவெடுக்க இந்தியா விரும்புகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ராணுவ தளவாடங்கள் துறையில் நேரடி அந்நிய முதலீட்டிற்கான அளவை உயர்த்துதல், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இரு ராணுவ தளவாட வழித்தடங்களை உருவாக்குதல், உள்நாட்டு பொருட்களை வாங்குவதற்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் இரு பட்டியல்கள் ஆகியவை இந்திய பாதுகாப்பு துறைக்கு மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

83 தேஜாஸ் போர் விமானங்களுக்கான இந்திய விமானப்படையின் சமீபத்திய ஒப்பந்தத்தில் ஹெச்ஏஎல்லுடன் அதிகளவிளான இந்திய நிறுவனங்கள் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு நாயுடு, இந்திய விமானவியல் உற்பத்தி சூழலியலை துடிப்புமிக்கதாக, தற்சார்பு மிக்கதாக இத்தகைய திட்டங்கள் ஆக்கும் என்றார்.