உலகளாவிய கோவின் மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் முறையில் தொடங்கி வைத்தார். இதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு, உட்பட 142 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த மாநாட்டில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது: வரலாற்று சிறப்புமிக்க உலகளாவிய கோவின் மாநாட்டில், உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 142 நாடுகளைச் சேர்ந்த 400 பங்கேற்பாளர்கள், இந்தியாவில் உள்ள 20 தூதரக அதிகாரிகள் மற்றும் ஐ.நா அலுவலக அதிகாரிகளிடம் உரையாற்றுவது கவுரவமிக்கது.
எங்களது டிஜிட்டல் இந்தியா நடவடிக்கையில், கோ-வின் தளம் மகுடம் போன்றது என்பது எனது தாழ்மையான கருத்து. உலக மக்கள் தொகையில் அதிக சதவீதம் பேருக்கு எளிதாக வெளிப்படைத்தன்மையுடன் தடுப்பூசி போட உதவுவதில் இந்த தளம் வரலாற்றில் இடம் பெறும். இந்த தளம் உலகளவில் வென்றது மற்றும் எங்கள் தொழில்நுட்பம், நிபுணத்துவத்தை பெறுவதில் பல நாடுகள் வெளிப்படுத்திய ஆர்வம் எனது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவின் தடுப்பூசி நடவடிக்கையில், கோவின் தளம் அடித்தளமாக உள்ளது என கூறுவதில் நான் பெருமிதம் அடைகிறேன். இது தடுப்பூசி போடுபவர்களை பதிவு செய்வது, தேதி நிர்ணயிப்பது, சான்றிதழ் அளிப்பது என ஒட்டுமொத்த நடவடிக்கையையும் கையாள்கிறது. இதில் உள்ள வெளிப்படையான முறை, ஒவ்வொரு டோஸ் தடுப்பூசியின் பயன்பாட்டையும், தடுப்பூசிகளின் விநியோகத்தையும் கண்காணிக்க உதவுகிறது.
இதில் உள்ள கூட்டுணர்வு, இந்த தொற்றிலிருந்து கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடம். தற்போதுள்ள சுகாதார நெருக்கடிகளை, பகிர்ந்த செயல்பாடுகள் மற்றும் வளங்கள் மூலம்தான் தீர்க்க முடியும்.
எங்கள் கோவின் தளம், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றியை பிரதிபலிக்கும் கண்ணாடி. இது நிலையான முன்னோக்கிய வளர்ச்சியை கண்டு, ஏராளமான மைல்கல் சாதனைகளை படைத்து வருகிறது.இவ்வாறு டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசினார்.
Leave your comments here...