செங்கல்பட்டில் டாஸ்மாக் கடை ஒன்றில் கூடுதலாக பத்து ரூபாய் கேட்பதாக கூறி மதுப்பிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது அங்கு வந்த எஸ்.ஐ ராஜா மதுப்பிரியர் மீது தாக்குதல் நடத்தினார்.
செங்கல்பட்டு மாவட்டம் அனுபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிய இளைஞர்கள், தங்களது மதுவை இருசக்கர வாகனத்தில் வைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த செங்கல்பட்டு நகர காவலர்கள் இருவர் இளைஞர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பிடுங்கியதாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தை அங்கு நின்று கவனித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக பணம் வாங்கக் கூடாது என்று அரசு கூறியும் பத்து ரூபாய் கூடுதலாய் வாங்குவதை நீங்கள் கேட்க மாட்டீர்களா என்று காவலர்களிடம் மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அந்த சமயத்தில் அங்குவந்த உதவி காவல் ஆய்வாளர் ராஜா, போலீசையே கேள்வி கேட்கும் அளவிற்கு பெரிய ஆளா நீ என்று வசைபாடி, உரிமைக்குரல் எழுப்பிய மதுபிரியரை சரமாரியாக கண்மூடித்தனமாக அறைந்தார்.இதன் வீடியோ நேற்று இணையத்தளத்தில் வைரலானது.
https://twitter.com/MoorthyKriishn1/status/1678700053861638144?s=20
இதையடுத்து, டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக கேட்பதாக கேள்வி எழுப்பிய நபர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் ராஜா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ராஜா விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Leave your comments here...