ஜம்மு-காஷ்மீர் மக்கள் மீது அரசு வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே, 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி

Scroll Down To Discover

அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் நாட்டின் பிற பகுதிகளுடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு திரு.நரேந்திர மோடி இன்று (06.02.2020) பதிலளித்தார். ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் மணிமகுடம் என்று குறிப்பிட்ட பிரதமர், ஜம்மு-காஷ்மீரின் உண்மையான அடையாளமே, அனைத்து நம்பிக்கைகள் மற்றும் அதன் சூஃபி பாரம்பரியத்தை நோக்கிய சமத்துவ அணுகுமுறைதான் என்றும் தெரிவித்தார்.

துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் வன்முறை மற்றும் பிரிவினைவாதம் மிகுந்த பகுதி என்று சித்தரித்து, அந்தப் பகுதியை பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது என்றும் பிரதமர் தெரிவித்தார்.19 ஜனவரி 1990 அன்று, ஏராளமான மக்கள் அவர்களது அடையாளத்தை இழந்து, ஜம்மு-காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் தமது நீண்ட பதிலுரையில், அப்பகுதியில் நிலவும் நிலைமை குறித்து விரிவாக எடுத்துரைத்ததுடன், ஜம்மு-காஷ்மீர் மக்களின் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாகவே அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதாகவும், அப்பகுதியில் தற்போது வளர்ச்சிப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அப்பகுதியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதாக குறிப்பிட்ட பிரதமர், மத்திய அமைச்சர்களும் அந்த யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களின் கருத்துக்களை நேரடியாக கேட்டறிந்திருப்பதாகவும்,  இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலனுக்காகவும், அப்பகுதியின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக பாடுபடவும் தமது அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், லடாக் பிராந்தியம் கார்பன் வெளியேற்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக உருவாக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.