ஜப்பான் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு – பிரதமர் மோடி வாழ்த்து

Scroll Down To Discover

ஜப்பானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள புமியோ கிஷிடாவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பான் கோவிட் பாதிப்பு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்துள்ளது. இதனால் ஜப்பான் பிரதமராக பதவியேற்ற ஓராண்டிற்குள் ஹோஷிஹைடி சுகாவுக்கு சொந்தக் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. சமீபத்தில் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி தலைவர் தேர்தல் நடந்தது. இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட புமியோ கிஷிடாவிடம், சுகா தோல்வி அடைந்தார்.

இதையடுத்து சுகா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களின் பெரும்பான்மை ஆதரவுடன், புமியோ கிஷிடா வெற்றி பெற்றார்.

இதையடுத்து ஜப்பானில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்துள்ளது. இதில் சுகா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 20 பேரில் இருவருக்கு மட்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.புமியோ கிஷிடா, 8ம் தேதி பார்லி.,யில் உரையாற்ற உள்ளார். அப்போது அவர் பார்லி.,யை கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிடுவார் என தகவல் வெளியாகிஉள்ளது.


ஜப்பான் புதிய பிரதமராக புமியோ கிஷிடோ பொறுப்பேற்றதற்கு, பிரதமர் மோடி ‘டுவிட்டரில்’ வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஜப்பானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மேன்மை தங்கிய கிஷிதா ஃபியுமியோவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா – ஜப்பான் இடையேயான சிறப்பு உத்திகள் மற்றும் உலகளாவிய கூட்டுறவை வலுப்படுத்தவும், நமது பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் வளத்தை மேம்படுத்தவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர் நோக்கியிருப்பதாகவும் பிரதமர் திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்