செல்போனில் ஆபாச படத்தை காட்டி, 13 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க. நிர்வாகி போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்..!

Scroll Down To Discover

சென்னை வண்ணாரப்பேட்டை மாடல் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பாளையம் ரவி (வயது 68) இவர் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகியாக இருந்து தற்போது அ.தி.மு.கவின் வட்டத் தலைவர் பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இந்திராணியின் மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 13 வயதான அந்த மாணவி, ரவி தன்னிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாக அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து 1089 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டு நடந்த விவரத்தை மாணவியின் தாய் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மகளிர் காவல் துறையினர் ரவியைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.அ.தி.மு.க நிர்வாகி என்பதால் காவல்துறையினர் கைது செய்யாமல் விடுவித்து விடுவார்கள் என்று எண்ணி அப்பகுதி மக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் கல்லறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசிய போலீசார் கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மாணவியை மருத்துவ பரிசோதனை செய்த போது அவரிடம் பாலியல் ரீதியாக ஈடுபட்டது மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து ரவியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.