சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி

Scroll Down To Discover

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா நாளையில் இருந்து டிசம்பர் 31-ந்தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. கொரோனா பரிசோதனை கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர் தாக்கல் செய்த மனு:சிதம்பரம் நடராஜர் கோவிலில், இன்று முதல், 31ம் தேதி வரை, மார்கழி ஆருத்ரா தரிசன மகோற்சவம் நடக்கிறது. இதில், பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவை ரத்து செய்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பக்தர்கள் எங்கிருந்து வந்தாலும், சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டது.

இதை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் அவசர வழக்காக விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் கோர்ட் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. கொரோனா அறிகுறி இல்லாதவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.அத்துடன் மாலை 3.00-4.00, 4.30-5.30, 6.00-7.00 ஆகிய நேரங்களில் தலா 200 வெளிமாவட்ட பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.