சிதம்பரம் நடராஜரை அவதூறு பரப்பிய யூடியூபரை கைது செய்ய வேண்டும் – சிவனடியார்கள் ஆர்ப்பாட்டம்..!

Scroll Down To Discover

சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட யூடியூபரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி, சிவனடியார்கள், பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் மூலவரான நடராஜரை இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தியும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றில் பதிவிடப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதனால் இந்த பதிவு யூட்யூப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் நடராஜரை இழிவுபடுத்தி யூடியூப்பில் பதிவு செய்த யூ.டியூபர் மைனர் விஜய் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவனடியார்கள் சார்பில் நேற்று மாலை சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர்.

இதற்காக இன்று காலை முதலே சிவனடியார்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் இசைக் கருவிகளையும், வாத்தியக் கருவிகளையும் இசைத்தபடி சிவ நடனம் ஆடினர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சக்திகணேசன் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்றார். இந்து மக்கள் தமிழர் கட்சி ராம.ரவிக்குமார் மற்றும் பா.ஜ.கவினர் கலந்துகொண்டனர்.