விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள கங்கர்செவல்பட்டியில், தாயில்பட்டியைச் சேர்ந்த சௌந்திரராஜன் என்பவருக்குச் சொந்தமான அலெக்ஸ் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு ஆலையில் 15க்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிக்கும் அறைகள் உள்ளன.
50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சரவெடி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். தயாரான சரவெடிகளை வழக்கம் போல் வெயிலில் உலர்த்தும் போது, எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டு, சரவெடிகள் வெடித்து சிதறியது.
இந்த வெடிவிபத்தில், வெடிகள் தீப்பிடித்து வெடித்ததில்,கீழத்தாயில்பட்டியைச் சேர்ந்த பிச்சைக்கனி மகன் ரஞ்சித் (22) என்பவருக்கு படுகாயம் ஏற்பட்டது. காயம்பட்ட அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வெம்பக்கோட்டை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து, பட்டாசு ஆலை போர்மேன் கங்கர்செவல்பட்டியைச் சேர்ந்த கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Leave your comments here...