சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு – ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு சம்மன்..!

Scroll Down To Discover

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தொடர்புடைய ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், பிரபல தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா (49) மற்றும் அவருடன் தொடர்புடைய சில நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையிட்டது. மும்பை மற்றும் உத்தரபிரதேசத்தின் சில நகரங்களில் சோதனைகள் நடந்தன.

இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ராஜ் குந்த்ரா மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலரை விசாரணைக்காக மும்பை அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளோம். நாளை (திங்கள்) காலை 11 மணிக்கு மும்பை அமலாக்கத்துறை ஆபீசில் ஆஜராகுமாறு ராஜ் குந்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.

இதுகுறித்து ராஜ் குந்த்ராவின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் அளித்த பேட்டியில், ‘ராஜ் குந்த்ரா மீது கூறப்படும் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டு பொய்யானவை. அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. அவரிடம் இன்னும் நான் பேசவில்லை. ஆனால் அவர் நிரபராதி என்று என்னால் சொல்ல முடியும்.

மும்பை போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையைப் பார்க்கும் போது, ராஜ் குந்த்ராவின் வங்கிப் பரிவர்த்தனைகள் சட்டபூர்வமானவையாக உள்ளன. அவர் முறையாக வரி செலுத்தியுள்ளனர். பணமோசடி போன்ற எந்தக் குற்றமும் அவர் செய்யவில்லை’ என்றார். ஏற்கனவே ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் ராஜ்குந்தரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை முன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.