கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது – மதுரை ஐகோர்ட்டு உத்தரவு..!

Scroll Down To Discover

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோவில்களிலும் சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த திருவிழாக்களில் காலம் காலமாக கலாச்சார ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.

இதனால் காவல்துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவில்லை. இதனால் கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க தர கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட மனுக்கள் விடுமுறை கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி தமிழ்ச்செல்வி, பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆடல் பாடல் நிகழ்ச்சியில் சட்ட ஒழுங்கு கடைபிடிக்க வேண்டும். எந்த பிரச்சினையும் வராது என மனுதாரர் தரப்பில் உறுதி அளிக்க வேண்டும்.

ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தவோ, ஆபாசமான நடனங்கள் இருக்க கூடாது. இந்த நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தி, சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டார்.