கோடை காலத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்..?

Scroll Down To Discover

காஷ்மீரில் அத்துமீறலில் ஈடுபடும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் எல்லையில் தாக்குதல் நடத்துவதை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றனர். அந்த வகையில் அங்குள்ள பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் மற்றும் மெந்தர் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்த தொடங்கினர். துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் நேற்று காலை சுமார் 5 மணி வரை தாக்குதலில் ஈடுபட்ட அவர்களுக்கு, இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளில், உலகம் ஒன்றிணைந்து செயல்படும் நிலையில், இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில்,பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது. கோடைக் காலத்தை பயன்படுத்தி, நம் நாட்டிற்குள் ஊடுருவ, அண்டை நாடான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ளனர்,” என, உயர்மட்ட ராணுவ தளபதி, லெப்டினென்ட் ஜெனரல், பாகவல்லி சோமாஷேகர் ராஜு கூறியுள்ளார்.

இது குறித்து ராணுவ தளபதி கூறுகையில்:- பயங்கரவாதத்தின் முதுகெலும்பை, நாம் ஏற்கனவே உடைத்துஉள்ளதால், ஜம்மு -காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படாமல் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். ஆனால், இதை பாகிஸ்தானால் ஜீரணிக்க முடியவில்லை. பயங்கரவாதத்தின் பின்புலம், ஏறக்குறைய உடைந்துவிட்டது. பயங்கரவாதிகளை அகற்றுவதில் நாம் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளோம். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கையை ஈடுசெய்ய, கோடைக்காலத்தில் எல்லை தாண்டிய ஊடுருவலை பாக்., அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.

இதற்கு அடிப்படையாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முகாம்களில், பயங்கரவாதிகள் குவிந்துள்ளனர்.அங்குள்ள, 15 ஏவுதளங்களும் நிரம்பியுள்ளன. இவர்கள், பாக்., ராணுவத்தின் உதவியுடன், நம் நாட்டிற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர்.இதுபோல், கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பயங்கரவாதிகள் ஊடுருவலுக்கு, பாகிஸ்தான் உதவி வருகிறது.