கொரோனா பரவல் : டி20 உலக கோப்பை ஒத்திவைப்பு.!

Scroll Down To Discover

ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 போட்டித் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடர், ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18ம் தேதி தொடங்கி நவம்பர் 15ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. பல தொடர்கள் ரத்தாகின.

உலக கோப்பை டி20 தொடர் நடக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இதில் உறுதியான முடிவை எடுக்காமல சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் காலம் கடத்தி வந்தது. இதற்கு பிசிசிஐ உட்பட பல்வேறு தரப்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தொடர் ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி நேற்று அறிவித்தது. அடுத்த ஆண்டு அக்டோபர் – நவம்பரில் இத்தொடர் நடத்தப்படும் எனவும், இறுதிப் போட்டி நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் – நவம்பரில் ஐபிஎல் டி20 தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.