கொரோனா ஊரடங்கு காலத்தில் 100 டன்னுக்கும் மேலான மருந்துகள், மருத்துவ உபரகணங்களை விநியோகம் செய்த தபால்துறை..!!

Scroll Down To Discover

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்த வைரஸ் தொற்றால் இந்தியாவில் 13,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,076 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், நாடு முழுவதும் 100 டன்னுக்கும் அதிகமான மருந்துகள், மருத்துவ உபகரணங்களை தபால்துறை விநியோகித்தாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை இணை செயலர் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நாடு முழுவதும் 100 டன்னுக்கும் அதிகமான மருந்துகள், செயற்கை சுவாச கருவிகள், பரிசோதனை கருவிகளை மருத்துவமனைகளுக்கும், பயனாளர்களுக்கும், வாகனங்கள் மற்றும் விமானங்கள் மூலமாக தபால்துறை விநியோகித்தது.

இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியின் கீழ் மத்திய அரசின் பல்வேறு திட்டப் பயனாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க, நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான தபால் ஊழியர்கள், தபால்காரர்கள் பணியாற்றுகிறார்கள். அரசால் வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்டவை, பயனாளர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க, அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் நடமாடும் தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.