கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு…!

Scroll Down To Discover

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நாங்கள் 8 பொருளாதார நிவாரண திட்டங்களை அறிவிக்க உள்ளோம். அதில் 4 திட்டங்கள் முற்றிலும் புதியவை, ஒன்று சுகாதார உள்கட்டமைப்பு சம்மந்தப்பட்டவை.

கோவிட்டால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அதிக நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளோம். அதாவது, கோவிட்டால் பாதிப்புக்குள்ளான துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். அதில், சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும்.

மேலும் மருத்துவமனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்க ரூ.100 கோடி வரை கடன் வழங்கப்படும். 7.95 சதவீத வட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு இந்த கடன் வசதி அமலில் இருக்கும். பிற துறைகளுக்கான கடனுக்கு வட்டி 8.25 சதவீதமாக இருக்கும். மற்ற துறைகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும்.

அவசர கால கடன் வசதியாக தொழில்துறையை சேர்ந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். அரசு உத்தரவாதத்துடன் வங்கிகள் மூலமும் தொழில்துறைக்கு கடனுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க சுற்றுலா பயணிகளுக்கு சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.