கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ,50,000 இழப்பீடு : அரசாணை வெளியீடு..!

Scroll Down To Discover

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த் பிறப்பித்த அரசாணை: உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு, 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். கொரோனா நிவாரண பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆகியவற்றில் ஈடுபட்டு உயிரிழந்தவரின் குடும்பத்துக்கும், இந்த நிதி வழங்கப்படும்.

இது, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். மாவட்ட கலெக்டர் இந்த உத்தரவை பின்பற்றி, சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்பு பணியில், முன்கள பணியாளர்களாக பங்கேற்று இறந்தவர்களுக்கு, 25 லட்சம் ரூபாய்; கொரோனாவால் தங்களின் பெற்றோர் இருவரையும் இழந்திருந்தால் அவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய்; பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்திருந்தால், 3 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது. அவர்கள், 50 ஆயிரம் நிதியுதவி பட்டியலில் இடம்பெற மாட்டார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.