கேரள எல்லையில் சீர்காழியைச் சேர்ந்த 40 குடும்பங்கள் சிக்கித் தவிப்பு.! கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரியுமா…?

Scroll Down To Discover

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 433 ஆக உயர்ந்து இருக்கிறது.   கொரோனா பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை  1568 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கட்டட பணிக்காக சென்ற  40-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த வகையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் புதுதெருவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு, பயத்தங்காடு, கீழக்காஞ்சாரி, சோளக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செங்கல் சூளைக்கு, கூலி வேலைக்கு சென்றிருந்தனர்.

தற்போது நாடு முழுவதும் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் அவர்கள் வேலை இழந்து, வருவாய் இல்லாமல் உணவிற்கு வழி இன்றி அங்கு தவித்து வருவதாகவும், தங்களை தமிழக அரசு எப்படியாவது சொந்த ஊர்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடும்பத்துடன் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து வீடியோவினை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்துள்ளனர்.


மேலும் அவர்களது சொந்த ஊரில் உள்ள அவர்களது உறவினர்கள் கேரளாவில் சிக்கித் தவிக்கும் அவர்களை காப்பாற்ற அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அவர்களது கோரிக்கை விடுத்துள்ளனர்.