கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் தீ விபத்து : பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு…. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் – முதல்வர் உத்தரவு

Scroll Down To Discover

கிருஷ்ணகிரி பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோயில் செல்லும் சாலையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் முதலில் 4 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்தனர். பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பட்டாசு வெடி விபத்தில் பலத்த காயமடைந்த அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் 4 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.தீ விபத்தில் ரவி, ஜெய்ஸ்ரீ, ருத்திகா, ருதிஷ், ராஜேஸ்வரி, இப்ராகிம், இம்ரான் ஆகியோர் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.கி ருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், பழையபேட்டை நகரம், நேதாஜி ரோடு, போகனப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில் இன்று (29-7-2023) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியை அனுப்பிவைத்துள்ளேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. அருகில் இருந்த ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களும் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். அதிகம் மக்கள் வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் வைக்க அனுமதி அளித்தது எப்படி என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி நகரில் நிகழ்ந்த இந்த விபத்து பயங்கர விபத்தாக பார்க்கப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு, காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.