கிராமங்களில் வசிக்கும் 2 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

Scroll Down To Discover

கிராமப்பகுதிகளில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிராமங்களை ஆய்வு செய்து அவற்றை ஒன்றிணைக்கும் ‘ஸ்வாமித்வா’ என்ற திட்டத்தின் கீழ் சொத்துகளுக்கான அடையாள அட்டைகளை வினியோகிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

முதல் கட்டமாக உத்தர பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகம் ஆகிய 6 மாநில விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே தொடங்கி வைத்து பேசினார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:நீண்ட காலமாக ஆட்சியி்ல் இருந்தவர்கள், தங்களை பாதுகாத்து கொள்ள கிராமங்களை புறக்கணித்தனர். நான் அதனை செய்ய மாட்டேன்.

கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள், கிராமங்களுக்கு செய்த பணிகளை விட, கடந்த 6 ஆண்டுகளில் மத்திய பா.ஜ., அரசு அதிக பணிகளை செய்துள்ளது. கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் தன்னிறைவு பெறுவதை பலர் விரும்புவதில்லை.


இடைத்தரகர்கள் மூலம் ஆட்சி செய்தவர்கள், விவசாயம், தொழிலாளர் சீர்திருத்தங்கள் குறித்து பொய்யை பரப்பினர். அவர்களால், இனிமேல் நாட்டை நிறுத்த முடியாது. பல ஆண்டுகளாக கிராமங்களில் வசித்த கோடிக்கணக்கான மக்களுக்கு சொந்தமான வீடு இல்லை. ஆனால், தற்போது கிராமங்களில் வசிக்கும் 2 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.