காஷ்மீரில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – போலீஸ் வேட்டையில் 600 பேர் சிக்கினர்..!

Scroll Down To Discover

காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலை தொடங்கி உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 7 பேரை சுட்டுக்கொன்றனர். இவர்களில் 4 பேர் சிறுபான்மையினர் ஆவர். இதற்கு ‘ரெசிஸ்டன்ஸ் போர்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்புதான் காரணம் என்று போலீசார் கூறுகிறார்கள். இந்த தொடர் கொலைகள், அரசியல்ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதேபோல் அக்டோபர் 5ம் தேதி மகான் லால் பிந்த்ரூ, காஷ்மீர் பண்டிட் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மருந்தாளுநர்; பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உணவு விற்பனையாளரான இந்து மதத்தைச் சேர்ந்த வீரேந்தர் பாஸ்வான், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநரன முகமது ஷாஃபி லோன் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அக்டோபர் 2ம் தேதி 2 இஸ்லாமியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தொடர் கொலைகள் காஷ்மீரில் சிறுபான்மையின மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயத்தில், இந்த கொலைகளை தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 600-க்கு மேற்பட்டோரை விசாரணைக்காக பிடித்துச் சென்றுள்ளனர். இவர்களில், முன்னாள் பயங்கரவாதிகள், அவர்களுக்காக வேலை செய்தவர்கள், கல்வீச்சில் சம்பந்தப்பட்டவர்கள், பிரிவினைவாதிகளுடன் தொடர்புடையவர்கள் ஆகியோரும் அடங்குவர். ஸ்ரீநகர் மாவட்டத்தில் மட்டும் 70 பேர் பிடிபட்டுள்ளனர்.

பிடிபட்ட 600-க்கு மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீபத்திய கொலைகள் குறித்து துப்பு துலக்கும் நோக்கத்தில் விசாரணை நடந்து வருகிறது. கொலைகளை செய்தது யார்? நோக்கம் என்ன? என்பதை அறிய முயன்று வருகிறார்கள்.