ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் தொழுகையில் ஈடுபட்ட 50க்கும் அதிகமானோர் பலியாயினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கலீஃபா சாஹிப் மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முஸ்லீம்களை குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 10 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், மருத்தவமனையில் 30க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் இருப்பதாகவும், பலி எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து மசூதியின் தலைவர் சையத் பாசில் அகா கூறுகையில், ‘தொழுகையில் கலந்து கொண்ட ஒருவர், குண்டுகளை வெடிக்க செய்து, தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளார். அதிர்ஷ்டவசமான இதில் நான் உயிர் பிழைத்த போதும், எனது உறவினர்கள் பலரை இழந்து விட்டேன்’ எனத் தெரிவித்தார். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
Leave your comments here...